இந்தியாவின் வழக்கமான சுகாதார சேவைகளை சீர்குலைத்த கோவிட்-19

இந்தியாவின் வழக்கமான சுகாதார சேவைகளை சீர்குலைத்த கோவிட்-19
X

சென்னை: இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோயை அடுத்து, வழக்கமான பிற சுகாதாரச்சேவைகளில் ஏற்பட்டுள்ள இடையூறின் அளவு, முன்புமதிப்பிடப்பட்டதை விட பெரியது என்று, புதிய அதிகாரப்பூர்வ தரவுகள் காட்டுகின்றன. மார்ச் 2020ஐ விட, ஏப்ரல் 2020இல் நோய்த்தடுப்பு மருந்துகள், பேறுகால சுகாதார தலையீடுகள், சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய் உள்ளிட்டவற்றில் சிகிச்சை அதிக சரிவைக் கண்டது; அதேநேரம், சில குறிகாட்டிகள் மே மற்றும் ஜூன் மாதங்களில் இது புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளையும் காட்டின. இந்த தாமதங்கள் நீண்டகால சுகாதார விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று, நிபுணர்கள் கூறுகின்றனர்.

தேசிய சுகாதார இயக்கத்தின் சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (NHM-HMISஎன்.எச்.எம்-எச்.எம்.ஐ.எஸ்) 2,00,000-க்கும் மேற்பட்ட சுகாதார மையங்களில் இருந்து, ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் வரை சுகாதார சேவைகளைப் பயன்படுத்துவதற்கான குறிகாட்டிகளைக் கண்காணிக்கிறது மற்றும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தரவுகள் புதுப்பிக்கப்படுகிறது. இந்த சுகாதார மையங்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களிலும் அரசு பொதுத்துறையிலும் உள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஊரடங்கு அறிவிப்புக்கு ஒரு வாரத்திற்கு பிறகு, மார்ச் 2020 தரவானது 2020 மற்றும் முந்தைய மார்ச் மாதங்களுடன் ஒப்பிடும்போது, நாட்டில் சுகாதார சேவைகள் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது. அதன் பிறகு இந்த தரவுகளை வெளியிடுவதை என்.எச்.எம். நிறுத்தியது. இந்த வாரத்தில், ஏப்ரல் - மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவை, என்.எச்.எம். வெளியிட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகக்கண்டிப்புடன் இருந்த மார்ச் மற்றும் ஏப்ரல் 2020 மாதங்களில் குறைவான பெண்களேபேறுகால சுகாதார சேவைகளை அணுகினர். கர்ப்பிணிகளுக்கான வழக்கமான சோதனைகள், தாய் -சேய் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத சோதனைகள் தவறவிடப்பட்டன, மேலும் மருத்துவமனைபிரசவங்களின் எண்ணிக்கையும் குறைந்தது; ஜனவரி மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் 5,80,000-க்கும் குறைவான மருத்துவமனை பிரசவங்களே இருந்தன, இது, பல பெண்கள் இன்னும் பாதுகாப்பற்ற பிரசவங்களை வீட்டில் மேற்கொண்டதையே குறிக்கிறது. ஜனனி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா [தாயின் சுகாதாரப்பாதுகாப்புத் திட்டத்தின்] கீழ் தங்களுக்கு தகுதியுள்ள சலுகைகளைப் பெற்ற பெண்களின் எண்ணிக்கையும், அதன் ஜனவரி எண்ணிக்கையில் பாதிக்கும் குறைந்துள்ளதை தரவு காட்டுகிறது.

Source: National Health Mission’s Health Management Information System data

என்.எச்.எம்-எச்.எம்.ஐ.எஸ் எண்ணிக்கைகளும், நோய்த்தடுப்பு சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றன, அவை உடனடியாக சரிசெய்துமீட்டெடுக்கப்படாவிட்டால், அது குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். ஏப்ரல் மாதத்தில் பேசில் கால்மெட்-குய்ரின்(பி.சி.ஜி) தடுப்பூசி (இது தீவிர காசநோயைத் தடுக்கும்) போடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தின் எண்ணிக்கையில் பாதியாக இருந்தது - அதாவது, அந்த மாதத்தில் 10 லட்சத்திற்கும் குறைவான குழந்தைகளுக்கே தடுப்பூசி கிடைத்தது.

Source: National Health Mission’s Health Management Information System data
Note: Pentavalent 1 is the first dose of a vaccine that protects against diphtheria, pertussis, tetanus, hepatitis B and Haemophilus influenza type B (Hib). Rotavirus 1 is the first dose of a vaccine that protects against the rotavirus which causes diarrhoeal infections

நோய்த்தொற்றின் ஆபத்து இருந்தும் கூட, “போலியோ, டிபிடி [டிப்தீரியா, பெர்டுசிஸ், டெட்டனஸ்], ஹெபடைடிஸ் மற்றும் நிமோகோகல் தடுப்பூசிகளை தாமதப்படுத்த முடியாது” என்று, மும்பை இந்துஜா மருத்துவமனை மற்றும் லிலாவதி மருத்துவமனை ஆகியவற்றின் குழந்தை மருத்துவ ஆலோசகரும்,நியோனாட்டாலஜிஸ்டுமான ரவீந்திர சித்தல், 2020 மே மாதம் இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்து இருந்தார்.

ஏப்ரல் மாதத்தில் புறநோயாளிகளின் வருகை, அதன் ஜனவரி மாத அளவில்பாதிக்கும் குறைந்தது;என்ஹெச்எம்-எச்எம்ஐஎஸ் தரவுகளின் படி 6.9 கோடிக்கும் குறைவான புற நோயாளிகளே வந்துள்ளனர். புற்றுநோய் மற்றும் தீவிர இதய நோய் உள்ளிட்ட கடுமையான நிலைமைகளுக்கான புற நோயாளிகள் சிகிச்சையும் இதில் அடங்கும். தங்களது புற நோயாளிகள் பிரிவில் (OPD) இந்த சரிவைக் கவனித்து வரும் மருத்துவர்கள், இது எதைக் குறிக்கிறது என்பதை -அதாவது வரவிருக்கும் நோய்ப்புயலை அறிவார்கள் . "நாம் ஏற்கனவே கண்டதுஎன்னவென்றால், புற நோயாளிகள் பிரிவு திரும்பத் தொடங்கும் போது,நோயாளிகளின் நோய்பாதிப்பு தன்மை மிகவும் ஆபத்தான மற்றும் நிர்வகிக்கப்படாத வடிவத்தில் அவர்களுக்கு இருக்கும், ” என்று மகாராஷ்டிராவின் வர்தாவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவ கண்காணிப்பாளர் எஸ்.பி. கலந்த்ரி எச்சரித்தார்.

Source: National Health Mission’s Health Management Information System data

ஏப்ரல் மாதத்தில், தீவிரமான தொற்றுநோய்களுக்கான உள்நோயாளிகளின் சிகிச்சை ஜனவரி அளவை விட 60% குறைந்துள்ளது, மேலும் ஆண்களை விட பெண்கள் மத்தியில்தான் சரிவு அதிகமாக இருந்தது என்று தரவு காட்டுகிறது.

Source: National Health Mission’s Health Management Information System data

தரவுகளில் இருந்து கிடைக்கும் கவலைப்படும் பிற குறிகாட்டிகளில் காசநோய் சிகிச்சைக்காக பதிவுசெய்யப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையில் 45% குறைவு; மற்றும்ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது, ஊரடங்கு தளர்வு இருந்த போதும் ஜூன் 2020 இல் எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஆண்களின் எண்ணிக்கையில் 60% குறைவு ஆகியன அடங்கும். பெரிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையும் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் பாதிக்கும் மேலாக குறைந்தது.

என்.எச்.எம். எண்ணிக்கையானது வேறு எந்த நோயில் இருந்தும் அல்லது காரணத்தில் இருந்தும் இறப்புகளில் எந்தவிதமான கூர்மையான அதிகரிப்பையும் காட்டவில்லை, ஆனால் இந்த உடனடி எண்ணிக்கை டயாலிசிஸ் சிகிச்சை இல்லாத ஒரு நபரின் நீண்டகால தாக்கத்தைக் காட்டாது.இந்த இடையூறு "கவலைக்குரியது" என்று கூறி, கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தின் மெக்கில் சர்வதேச காசநோய் மையத்தின் இயக்குனர் மதுகர் பை, மின்னஞ்சலில் தெரிவித்தார்: "இந்த நெருக்கடியின் போது தவறவிட்ட ஒவ்வொரு நோய்த்தடுப்பு மருந்தும், எதிர்காலத்தில் காசநோய் அல்லது அம்மை நோயாக இருக்கலாம். தற்போது காசநோய் கண்டறியப்படாத ஒவ்வொரு நோயாளியும், எதிர்காலத்தில் மேம்பட்ட நோயுடன் அதிக இறப்பில் முடிவடையும். மருத்துவமனை பிரசவங்கள் குறைந்துவிட்டால், அது தாய் மற்றும் புதிதாகப்பிறந்த சிசுவின் இறப்பு அபாயத்தை அதிகரிக்கிறது” என்றார்.

வரும் 2035 ஆம் ஆண்டுக்குள் --அதாவது இலக்கை விட ஒரு தசாப்தம் கழித்து-- காசநோயை முற்றிலும் ஒழிக்க முடித்தால் இந்தியா அதிர்ஷ்டசாலியாக இருக்கும் என்று, மே மாதம் இந்தியா ஸ்பெண்டிடம் பை கூறி இருந்தார். அத்துடன் கோவிட்-19 தொடர்பான இடையூறுகளால் காசநோயின் மாதாந்திர அறிவிப்புகளில் 80% வீழ்ச்சியை சுட்டிக்காட்டுகின்றன.

பொது சுகாதார மற்றும் மேம்பாட்டு நிபுணர்களைப் பொறுத்தவரை, இந்தியாவில்ஆரோக்கியத்திற்கு ஏற்படக்கூடிய தீங்கு பற்றி இந்த எண்ணிக்கை குறிப்பிட்டு,இந்தியாவின் கோவிட்-19 மறுமொழி நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கிறது.

"இந்தியாவில் கோவிட்டின் குறைந்த இறப்பு விகிதத்தின் சமீபத்திய செரோ-சர்வே சான்றுகள், சுகாதார சேவைகளை சீர்குலைப்பதற்கு பங்களிக்கும் நடவடிக்கைகள் உட்பட, விதிக்கப்பட்டுள்ள சில கடுமையான நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று வளர்ச்சி பொருளாதார நிபுணரான ஜீன் ட்ரூஸ், இந்தியா ஸ்பெண்டிடம் தெரிவித்தார்.

"கோவிட் -19 இல் மட்டுமே இந்தியா கவனம் செலுத்த முடியாது" என்று, பை கூறினார். "வழக்கமான பிற சுகாதார சேவைகளை மீண்டும் தொடங்க முயற்சிசெய்ய வேண்டும், கடந்த சில மாதங்களாக தவறவிட்ட அனைத்து நோய்களையும் சமாளிக்கும் எழுச்சித் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

"நோய்த்தடுப்பு மருந்துகளைத் தவறவிட்ட குழந்தைகளுக்கு பூஸ்டர் ஷாட்களை வழங்க முடியுமா? நோய்த்தடுப்பு மருந்துகள் தவறவிட்டதால் தட்டம்மை மற்றும் டிப்தீரியா நோய்கள் பரவும் ஆபத்து உள்ளதா? வீட்டிலேயே பிரசவித்த தாய்மார்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? ” என்று இந்தியாவின் முன்னாள் சுகாதார செயலாளர் கேசவ் தேசிராஜு கேள்வி எழுப்பினார். "அவர்கள் உடனடியாக பரிசோதிக்கப்பட வேண்டும். மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் தவறவிட்ட அனைவருக்கும் என்ன நடந்தது என்பதைப் பார்க்க, அவர்கள் ஒன்றிய அளவில் கணக்கெடுப்பு செய்ய வேண்டியிருக்கும், ”என்று அவர் கூறினார்.

(எஸ். ருக்மிணி, சென்னையைச் சேர்ந்த சுதந்திர பத்திரிகையாளர்).

உங்களின் கருத்துகளை வரவேற்கிறோம். கருத்துகளைrespond@indiaspend.org. என்ற முகவரிக்கு அனுப்பலாம். மொழி, இலக்கண நடை கருதி அவற்றை திருத்தும் உரிமை எங்களுக்கு உண்டு.

Next Story